சாதிப் பாகுபாட்டால் ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.

முதலாமாண்டு படித்து வரும் அவர், நேற்று முன்தினம் ஐ.ஐ.டி விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடுதி பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொவாய் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, மும்பை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் அம்பேத்கரிய மையம், தர்ஷன் சொலான்கியின் தற்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

அதில், ”இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சுகளால் முதலாமாண்டு மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தர்ஷன் சாகடிக்கப்பட்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே இன்று சென்னை ஐஐடியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments (0)
Add Comment