பாராட்டுவதிலும் மன்னாதி மன்னன் தான் எம்.ஜி.ஆர்!

கதை, வசனகர்த்தா ஆரூர் தாஸின் அனுபவம்

“எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு அடுத்த படமான ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அன்று மாலைச் சிற்றுண்டி இடை நேரத்தின்போது தேவரண்ணன் என்னைத் தனியே அழைத்துச் சென்று ரகசியமாகச் சொன்னார்,

அண்ணன்:– ‘அப்பா! இன்னிக்கு ராத்திரி ஷூட்டிங் முடிஞ்சப்புறம் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாவோடயும், இன்னும் சிலருடன் நீ எழுதின சிவாஜி பிலிம்ஸ் ‘புதிய பறவை’ படத்தைப் பார்க்கப்போறாரு.

என்னையும் திருமுகத்தையும் இருக்கச் சொல்லி இருக்காரு. அதனால் நீ இருந்தால், உன்னை வச்சிக்கிட்டு எம்.ஜி.ஆர். படம் பார்க்க யோசிப்பாரு. அவருக்குத் தர்ம சங்கடமாயிருக்கும் இல்லியா?

அதனால ஏழு மணிக்கப்புறம் நீ எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிக்காம ஜாடையா – நைசா நழுவிப்போயிடு. அவரு உன்னைப்பற்றிக் கேட்டார்னா, நான் அதை இதைச் சொல்லி சமாளிச்சிக்குறேன்.

அதனால்தான் முன்னாலேயே இந்த விஷயத்தை உங்கிட்டே சொல்லிட்டேன். சரிதானா?’

நான்:– ‘நல்லவேளைண்ணே, முன்னாடியே சொல்லிட்டீங்க. ஒருவேளை எம்.ஜி.ஆர். தன்னோட சேர்ந்து என்னையும் படம் பார்க்கச்சொல்லி, அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவரோட சேர்ந்து நானும் படம் பார்த்தா அது அவ்வளவு நல்லாயிருக்காது.

என்னை வச்சிக்கிட்டு படத்தைப்பற்றி அவரோ, நீங்களோ மனந்திறந்து எதுவும் பேச முடியாது இல்லியா? ஏழு மணிக்கு என்னா? இதோ இப்பவே, இப்படியே கம்பி நீட்டிடுறேன். நல்ல பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் போயிடுறதுதான். போயிடுறேன்’.

மறுநாள் காலை. வழக்கம்போல எம்.ஜி.ஆரின் ‘மேக்–அப்’ அறைக்குள் புகுந்தேன். எதிர்க்கண்ணாடியில் என்னைப் பார்த்த அந்தக் கணத்திலேயே சுழல் நாற்காலியைத் தன் இடப்பக்கம் சுழற்றி என் கையைப்பற்றி ‘வாழ்த்துகள்’ என்றார் எம்.ஜி.ஆர்.

நான்:– ‘எதுக்காகண்ணே வாழ்த்து?’

எம்.ஜி.ஆர்:– ‘நேத்து ராத்திரி அம்மாவும் நானும் உங்க ‘புதிய பறவை’ படம் பார்த்தோம். நீங்க எங்கிட்டே சொல்லிக்காம எங்கே போயிட்டீங்க?’

நான்:– ‘ஏவி.எம்.லேருந்து போன் வந்தது. போயிட்டு உடனே வந்திடலான்னுதான் போனேன். அங்கே லேட்டாயிடுச்சு. அப்படியே வீட்டுக்குப் போயிட்டேன்’.

எம்.ஜி.ஆர்:– ‘நீங்களும் என்னோட இருந்திருந்தா நல்லாருந்திருக்கும். இங்கிலீஷ் படம் மாதிரி வித்தியாசமா இருக்கு.

உங்க வசனங்களும் அதுக்கேத்த மாதிரி வித்தியாசமா எழுதி இருக்கீங்க? ‘கிளைமாக்சு’ல அந்த சஸ்பென்சை உடைக்கிறதுக்கான உங்க வசனங்கள் பிரமாதம்!’

இதைக்கேட்டதும் நான் குனிந்து, நாற்காலியில் கால் வைக்கும் படியின் மீதிருந்த அவருடைய பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டேன்.

எம்.ஜி.ஆர்:– ‘விசுவோட இசை, கண்ணதாசன் பாட்டு எல்லாமே நல்லாயிருக்கு. படத்துல உங்க ஹீரோயின் (சரோஜாதேவி) ரொம்ப அழகா இருக்காங்க’.

சவுகார் ஜானகி ரொம்ப அற்புதமாக நடிச்சிருக்காங்க. அவுங்க நடிப்புல ஒரு ‘ஸ்டைல்’ இருக்கு.

எடுத்த எடுப்புல அவுங்களோட அறிமுகமும், கையில மைக்கை வச்சிக்கிட்டு பாடுறதும், பின்னால அதே பாட்டைத் திரும்பவும் பாடுறதும் திகைப்பை உண்டாக்குது.

கலர் – ஒளிப்பதிவு நல்லா வந்திருக்கு. மொத்தத்துல படம் நல்லா வந்திருக்கு. அதனாலதான் உங்களுக்கு வாழ்த்து சொன்னேன்!”

– நன்றி: தினத்தந்தி: ஆரூர்தாஸ் பதிவிலிருந்து…

Comments (0)
Add Comment