வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா!

லியோ படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்ததற்கு விளக்கம் 

தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லியோ.

அதில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மூணாறிலும் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்திவருகின்றனர். கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்துசென்றனர். அப்போது நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார்.

காஷ்மீரில் ஷூட்டிங் தொடங்கிய மூன்றே நாளில் நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து வந்துவிட்டதாக தகவல் வந்தது.

லோகேஷிடம் சண்டையிட்டு கோபத்தில் சென்னைக்கு திரும்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின.

ஆனால் இது உண்மையில்லை என்பதை நடிகை த்ரிஷாவின் தாயார் உமா, சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார்.

ஆனாலும், அவர் காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து தங்கி இருந்தது ஏன் என்கிற கேள்வி எழுந்தது.

தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறதாம்.

அந்த குளிரை தாங்கமுடியாததால் நடிகை த்ரிஷா, டெல்லிக்கு வந்து தங்கி இருந்தாராம். தற்போது அவர் மீண்டும் காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

இந்த ஒரே பதிவு மூலம் லியோ படத்தில் இருந்து, தான் விலகியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

Comments (0)
Add Comment