உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்சநீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் உச்சநீதிமன்றம் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வந்தது.

இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு கடந்த 4-ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த விசயத்தில் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

Comments (0)
Add Comment