நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதுபோல் சித்தரிக்கும் பாஜக!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், பாஜக அரசின் தேர்தல் பரப்புரையாக அமைந்துள்ளது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது எனவும், உண்மைக்கு மாறான விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்றும் பாஜக அரசுக்கு நற்சான்று வழங்குவதாகவும், தேர்தல் காலத்துப் பரப்புரையாகவும் குடியரசுத் தலைவர் உரை அமைந்திருப்பது வேதனைக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், விலைவாசி ஏற்றமும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளன எனவும்,

கிராமப்புறங்களில் வறுமை தாண்டவம் ஆடுகிறது என்றும், மோடி அரசு தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு எப்படி பொது வளங்களையெல்லாம் தாரை வார்க்கிறது என்பதை உலகே அறியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் கூட்டாளியான அதானியின் மோசடிகள் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட்டு அதன் காரணமாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எல்.ஐ.சி முதலான பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான நட்டத்தை சந்தித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள முனைவர் தொல்.திருமாவளவன்,

இந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதானியின் நிறுவனங்களுடைய பங்குகள் ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன எனவும்

அதனால் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனவும் இந்நிலையில், இந்தியப் பொருளாதார நிலை மேம்பட்டிருப்பதாகக் கூறுவது வேடிக்கையாகவுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனாவில் நேரிட்ட 90% உயிரிழப்பை இந்திய அரசு வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டது என தெரிவித்துள்ள முனைவர் தொல். திருமாவளவன், கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டது எனவும்

அந்த அறிக்கையின்படி பார்த்தால் உலகத்திலேயே அதிக உயிரிழப்பு இந்தியாவில்தான் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த உண்மை குடியரசுத் தலைவருக்குத் தெரியுமா? தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி அரசின் அடக்குமுறைகள் காரணமாக கருத்துச் சுதந்திரம் மிக மோசமாக பறிக்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ள முனைவர் தொல்.திருமாவளவன், பிபிசி ஆவணப் படத்தைப் பார்த்தார்கள் என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் எனவும்,

இத்தகைய அடக்குமுறை நிலை உலகில் வேறு எங்குமே கிடையாது எனவும் நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுவது போல ஒரு சித்தரிப்பைக் குடியரசுத் தலைவர் முன் வைத்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீன ராணுவம் இந்திய கட்டுப்பாட்டில் இருந்த பல கிராமங்களை ஆக்கிரமித்து இருக்கிறது என்றும், அங்கே தனது இராணுவக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் சாட்டிலைட் படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களோடு அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள முனைவர் தொல்.திருமாவளவன்,

சீன ஆக்கிரமிப்பு பற்றி பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ பேச மறுக்கிறார்கள் எனவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாலும் ராணுவ இரகசியம் என்று பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் மக்கள் மீதும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என குற்றம்சாட்டியுள்ள விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன்,

தலைநகர் டெல்லியிலேயே பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழல் உள்ளது எனவும் இதையெல்லாம் மறைத்துவிட்டு இந்த அரசு நலிந்த பிரிவினருக்காகவும் பெண்களுக்காகவும் பாடுபடுகிற அரசு என்று குடியரசுத் தலைவர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Comments (0)
Add Comment