ஜல்லிக்கட்டால் ஏற்பட்ட உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர்.

ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி வலது கண் பார்வையை சிவக்குமார் இழந்தார். இதைதொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ஏற்கனவே பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன், காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டியின்போது மாடு முட்டியதில் மதுரை சுக்காம் பட்டியைச் சேர்ந்த பூமிநாதன் உயிரிழந்தார்.

பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Comments (0)
Add Comment