அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தவருக்குமான ஜல்லிக்கட்டு?

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது வரும் 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று மதுரை அவினியாபுரத்தில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் ஜல்லிக்கட்டு தொடர்பான மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது நீதிமன்ற உத்தரவையடுத்து, அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்தப்பட்டது.

அதேபோல், இந்த ஆண்டும் தை ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு சமூகம் மட்டுமே நடத்தாமல், அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது எனவும்,

ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன எனவும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர் எனவும்

பல வகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் எனவே மாவட்ட நிர்வாகம் தலைமையில் போட்டியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவனியாபுரத்தின் அனைத்து சமுதாய  மக்களையும் இணைத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என்றும்,

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டனர்.

அதேபோல் சமாதான கூட்டத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனவும்

ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பட்சத்தில்,

அங்கு சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Comments (0)
Add Comment