கொரோனா அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகும்!

– அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் ஶ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நர்சு குடியிருப்புகள், மானாமதி புறநோயாளி பிரிவு கட்டிடம் உள்ளிட்ட 9 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உருமாறிய கொரோனா வைரஸ் தான் தற்போது சீனா மட்டுமல்ல தைவான், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பெருமளவில் பரவி வருகிறது.

சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிகிறது, இருப்பினும் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை, கொரோனா வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Comments (0)
Add Comment