கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!

 – தமிழக அரசு

தற்போது புதிய கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும். பயன்படுத்தப்படாத செறிவூட்டிகள் பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசரகால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்.

மேலும், N95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் மதிப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள், பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கொரோனா நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளின் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. 

Comments (0)
Add Comment