கோட்சே வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கும்!

– முதல்வர் ஸ்டாலின்

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், துணைத் தலைவருமான கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு என்ற நூலை வெளியிட்டார்.

முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொது பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் குரலை எதிரொலித்தவர் நேரு. ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் நேரு. வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர் நேரு. திராவிட இயக்கத்தின் முதலாவது கொள்கை சமூக நீதி.

ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலை பேசவில்லை… கொள்கை அரசியலையே பேசினார். அதனால்தான் பலராலும் அவர் எதிர்க்கவும்பட்டார்.

உண்மையில் ராகுல் காந்தி பேசுவதை கேட்கையில், சில நேரங்களில் ஜவஹர்லால் நேருவே பேசுவது போல உள்ளது. வீரனின் வாரிசு, அப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்! கோட்சேவின் வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கத்தான் செய்யும்.

இந்தியா தனது அடையாளமாக கொள்ள வேண்டியது நேருவை தான். நேரு தூய்மையானவர். அச்சம் இல்லாத மாமனிதர். துணிவில் நேருவை மிஞ்ச ஆள் இல்லை. தமிழகத்தின் மீது இந்தி திணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று பேசினார்.

விழாவில் பேசிய திருமாவளவன், “வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நூலை தமிழக முதல்வர் வெளியிட்டது மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த நூலில் பல்வேறு வரலாற்று களஞ்சியம் இருக்கிறது.

ஜவஹர்லால் நேரு ஒரு குடியரசுவாதி. நேரு முற்போக்கு சிந்தனைவாதி. ஏழை எளியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செயலாற்றினார். ஜவஹர்லால் நேரு காந்தியுடன் கருத்து முரண்பாடு கொண்டவர் என்றாலும் அவருடன் இணைந்து செயல்பட்டார்.

இஸ்லாமியர்கள் கொண்டாட வேண்டிய ஒரு தலைவர் மகாத்மா காந்தி. இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து செயல்படப் பாடுபட்டவர் மகாத்மா காந்தி.

நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற 108 நாட்களாக தனது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கட்சி தலைவர் பதவிக்கு ஆசைப்படாமல் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நடைபயணம் இன்று வெற்றிகரமாக செல்கிறது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.

சனாதன சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க மிகவும் நெருக்கடியான காலத்திலும் ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மதசார்பின்மை கோட்பாட்டை பாதுகாக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நடை பயணம் தேவையான ஒன்று இந்த நடைபயணம் இந்திய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் பயணத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகளுக்கு உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இந்தியாவை கட்டியமைக்க நேரு ஆற்றிய பணிகள் பெரிது.

நேருவின் ஆட்சியில் பல்வேறு சிறப்புகள் இருந்தன. வன்முறை இல்லாமல் சமதர்ம ஆட்சியை நடத்தினார்.

இந்தியாவில் கொஞ்சம், கொஞ்சமாக பொதுத் துறைகளை கொண்டு வந்தார். இன்றைய நாடு வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் நேரு என்றார்.

Comments (0)
Add Comment