சொத்துக் குவிப்பு வழக்கில் கீதாஜீவன் குடும்பத்தினர் விடுதலை!

தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி.

இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கீதா ஜீவனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2-வது என்.பெரியசாமி மனைவி எபனேசர், 3-வது மகன் ராஜா, 4-வது தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், 5-வது அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், 6-வது கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார். அவரைத் தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கீதா ஜீவன் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிக்காலத்தில் எங்கள் தந்தை பெரியசாமி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தந்தை உட்பட குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு நியாயம் கிடைத்துள்ளது. நீதி வென்றுள்ளது” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment