இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?

நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.

நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. மக்களாட்சி சிறப்பாக நடைபெறவும், அதன் மாண்பு காப்பாற்றப்படவும் இந்நான்கு தூண்களும் வலுவாக இருப்பது அவசியம்.

ஜனநாயக தூண்களை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

1949 நவம்பர் 26-ம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையை ஏற்று, நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்டது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution Day) கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான, அரசியலமைப்புச் சட்ட தினம், அரசியலைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது குறித்த பல சுவாரஸ்மான தகவல்கள், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பக்க பதிவிலிருந்து இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது.

மண்டல் இடத்தில் அம்பேத்கர் :

இந்திய அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள், 1946 டிசம்பர் 9-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் 296 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

முதலில் இக்குழுவில் டாக்டர் அம்பேக்தர் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர் நிர்ணய சபையிலிருந்து வெளியேறியதால், அவருடைய இடத்தில் அம்பேத்கர் இடம் பெற்றார்.

பி.என்.ராவ் :

நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ்காரர்கள் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த தலையாய பணியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.என்.ராவ் என்பவர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.

அரசியலமைப்பு நிர்ணய மன்றம் :

பல அறிஞர்களின் கடினமாக உழைப்பின் பயனாக, மூன்றாண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1949 நவம்பர் 26-ம் தேதி இந்தச் சட்டம் இறுதி செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்தச் சட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்கில் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த மன்றத்தில் ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்.

ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தைப் பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார்.

சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தைப் பிரதிபலித்தார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ், முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர், விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர்.

கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை.

அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

சட்ட வரைவுக் குழு 1947, ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத, பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

பி.ஆர்.அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி,கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

இந்தக் குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21 இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 – ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 – ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் கையொப்பத்தைப் பெற்றது.

ஜனவரி 24 இல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26-ஆம் தேதி, இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஜனவரி 26 -ஆம் தேதியை, இந்தியக் குடியரசு நாளாக ஏற்பதென்றும், அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது. அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன.

ஜனநாயகம் என்ற கோட்பாட்டின்படி பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது.

வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது.

பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.

ஆனால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை.

இதேபோல் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளன.

ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.
இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் எனக் கொண்ட பன்மையில் ஒருமை என்ற அடிப்படையில் பல வட்டாரங்கள் இணைந்து வாழ்கின்றோம்.

சமஸ்டி அமைப்பின் வேகத்தையும், தாக்கத்தையும் மத்தியில் ஆளும் மத்திய அரசு உணர வேண்டும்.

மாநிலங்களுக்கிடையே பாரபட்சமில்லாமல் சம உரிமைகளோடு, மாநில சுயாட்சி பெற்றிடும் வகையில் நம்முடைய பணிகளும், நம் அணுகுமுறைகளும் இருக்கவேண்டும்.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்து உயிரோட்டமான ஜீவனாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் எழுத்து வடிவம் இல்லை. நம்முடைய உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிபடுத்துகின்ற பிரகடனமாகும்.

இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை, பல நாள்கள் அமர்ந்து விவாதங்களும், ஆலோசனைகளும் நடத்தி வடித்தெடுக்கப்பட்ட அரசியல் சிற்பம் தான் நம் அரசியல் சாசனம்.

டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து ஆந்திராவை சேர்ந்த அறிஞர் பி.என்.ராவ் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரசியல் அமைப்புச் சட்டங்களை எல்லாம் அறிந்து கொண்டு அதை நம் நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் செய்து, இந்திய அரசியல் சாசனம் எழுத பெரும் பங்காற்றினார்!

இந்நாளில், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை நாட்டுக்கு தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், திரு பி.என். ராவ் அவர்களையும் நினைவு கூறுவோம்!

தகவல்: மா.சுந்தரமூர்த்தி, அஞ்சல்தலை சேகரிப்பாளர், செய்யாறு.

Comments (0)
Add Comment