பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்!

– ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சில தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதன் அடிப்படையில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இப்போது பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அதில், “மாநகர் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் பேருந்துகளை இயக்கக் கூடாது. 

அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி / இறக்கி செல்ல வேண்டும்.

பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி / இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதனப் பேருந்துகளில் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும்.

குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டணங்களை வசூலித்தல் கூடாது.

மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும்.

மாறாக பணியின் போது வீண் வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.

பேருந்துகளின் சிறிய, பெரிய பழுதுகளை ஒவ்வொரு நாளும் இரவில் சரிசெய்து மறுநாள் காலையில் அதனதன் வழித்தடத்தில் கால அட்டவணைப்படி முறையாக இயக்கிடல் வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தினை எத்தகைய விபத்திலும் குறிப்பாக உயிரிழப்பு விபத்து ஏற்படா வண்ணம் தானியங்கி மூடு கதவினை ஒவ்வொரு நிறுத்தத்திலும் சரியாக திறந்து / மூடி பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்குதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை துணை மேலாளர் மற்றும் முதல்வர் பயிற்சி பள்ளி ஆகியோர் பயிற்சிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நன்கு விளக்கி கூறி கடைப்பிடிக்க செய்ய வேண்டும்.

மேலும் அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் (போ) மற்றும் மண்டல மேலாளர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை ஓட்டுநர் /நடத்துநர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் நன்கு விளக்கி கூற வேண்டும்.

இதன் மூலம் போக்குவரத்து கழகத்தின் பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயணச்சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாயினை பெருக்கிட முடியும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

Comments (0)
Add Comment