ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாத வீரன்!

வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா?

வாளேந்தியபடி மிடுக்குடன் கருங்கல் நிழலாக நிற்கிறது கட்டபொம்மன் சிலை. கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி போகிற சாலையில் கயத்தாறில் சற்று வெளிறிய உயரமான பீடம்.

அதன்மேல் கேடயத்தை ஊடுருவிய படி இரு வாள்கள். அதற்குமேல் வெளியை வெறித்த பார்வையோடு கட்டபொம்மனின் சிலை இருக்கும் இடம் தான் – தூக்குக் கயிறு அழுத்தி மூச்சு அவிழ்ந்து அவன் சடலமாகப்பட்ட இடம்.

1799, செப்டம்பர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைச் சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. “வலுவான பீரங்கிகளுக்கு முன் மண் கோட்டை தாங்குமா?” யோசித்து சிலருடன் தப்பிக்கிறான் கட்டபொம்மன்.

கோட்டை தரை மட்டமாகிறது; மீண்டும் அந்தப் பகுதி செழிக்காமல் இருக்க உப்பையும், ஆமணக்கையும் தூவுகிகிறார்கள். கட்டபொம்மனைத் தேடுகிறார்கள். தண்டோரா போடுகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு புதுக்கோட்டைக்கு அருகே கானாம்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மன் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபடுகிறான்.

பிடிபட்டதும் தன்னுடைய உயிரை விட முயற்சி செய்கிறான். தடுத்து விடுகிறார்கள். மதுரை வழியாகக் கயத்தாறுக்குக் கொண்டுவந்து அங்கிருந்த கட்டிடத்தில் சிறை வைக்கிறார்கள்.

அந்தக் கட்டடம் இப்போதும் பாழடைந்த அடையாளமாக இருக்கிறது. அக்டோபர் 16 ஆம் தேதி, கயத்தாறு வெட்டவெளியில் விசாரணை. பல பாளையக்காரர்கள் கூடியிருக்கிறார்கள். சுற்றி அடர்த்தியான கூட்டம்.

வரி கட்டாதது, ஆங்கிலேய அரசுக்கு அடங்கி நடக்காதது உட்பட நான்கு குற்றச்சாட்டுக்கள். சில சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள்.

“இதில் வாதாட என்ன இருக்கிறது? இதுதான் என் தலைவிதி, என்னை என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்” – விரக்தியான பதில் கட்டபொம்மனிடமிருந்து.

மேஜர் பானர்மென் மதியத்திற்குப் பிறகு தூக்குப் போடுகிற தீர்ப்பை அறிவிக்கிறார். கட்டைப் புளியமரம். மேலே சுருக்குக் கயிறு.

சிறு ஏணிப்படி. சுற்றி இருந்த பாளையக்காரர்களை வெறித்தபடியே தூக்கிலிடப்படும் இடம் நோக்கி நகர்கிறான் கட்டபொம்மன்.

ஒருவித துக்கம் ததும்புகிறது முகத்தில். தன்னுடைய ஊமைச் சகோதரனுக்காக வருத்தப்படுகிறான். “கோட்டையைப் பாதுகாப்பதிலேயே நான் இறந்திருக்கக் கூடாதா?” ஆதங்கப் படுகிறான்.

கயிற்றை மாட்டுகிறார்கள். இறுக்கியதும் ஏணிப்படியை உதைக்கிறான். அசைவு நின்று இரண்டு மணி நேரம் அப்படியே மரத்தில் தொங்குகிறது உடல்.

சிறையிலிருந்த அவனது தம்பி ஊமைத்துரையை அழைத்து வந்து அங்கங்கேயே கட்டபொம்மனின் உடலைத் தகனம் செய்கிறார்கள். அப்போது கட்டபொம்மனின் வயது 39. (ஆதாரம்: கட்டபொம்மனும், கலெக்டர் ஜான்சனும் – செ.திவான்).

தூக்கில் போடப்பட்டு இருந்த இடத்தைப் பொதுமக்கள் கடக்கும்போது, நினைவாக ஒரு கல்லை வைப்பது வழக்கமாகி அந்த இடத்தில் பெரும் கற்குவியல் மலை மாதிரிக் கிடந்தது.

– ‘மணா’வின் ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து…

Comments (0)
Add Comment