டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்; 3 மாதங்களுக்கு கவனம் தேவை!

தமிழகத்தில் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். செப்டம்பரில் 572 பேர், அக்டோபரில் 616 பேர் என பாதிப்பு உயர்ந்தது.

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் டெங்கு குறித்து விளக்கமளித்துள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், “மாநிலம் முழுதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு, டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று தடுப்பில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன.

குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு, கொசுப் புழு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”  எனக் கூறினார்.

Comments (0)
Add Comment