கிராம சபைக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்!

தமிழக அரசு வலியுறுத்தல்.

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, நாளை உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவித்தபடி, நாளை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.

முக்கிய தொழில் நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

எனவே, நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடைய வேண்டும்” என  தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Comments (0)
Add Comment