எது பெரிய படம்? – கமல் விளக்கம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள ‘செம்பி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் கமல்ஹாசன், ”பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது.

நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள்.

ஆனால், இப்போது அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில்தான் இருக்கிறது.

இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள். அது தான் எனக்கு பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக் கேட்டால் அது பெரிய படம் இல்லை.

ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும்.

நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள் அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். செம்பி படம் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்” என்றார்.

Comments (0)
Add Comment