காவேரித் தண்ணிக்கும் கலைக்கும் என்ன தொடர்பு?

ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.

வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.

இசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.

தன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார்.

ஆனால், நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்!’ என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.

காரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.

கார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் “ஆகா! அற்புதம்!” என்றார்.

உடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, “தம்பி! உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?” என்று கேட்டார்.

“ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட, திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது” என்றார் வாலி.

“நான் இப்போது பாடியது என்ன ராகம்?” என்று ஜெயராமன் கேட்டார்.
“காமவர்த்தினி” என்று பதில் சொன்னார், வாலி.

“பலே!” என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.

பிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, “இது ஹரி காம்போதி”, “இது பைரவி”, “இது கல்யாணி” என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.

மனம் மகிழ்ந்து போன ஜெயராமன், “தம்பி! நீங்க காவேரி தண்ணியாச்சே! சங்கீத ஞானத்துக்கும் கேட்கணுமா?” என்று வாலியை பாராட்டினார்.

பிறகு, “தம்பி! நீங்க என்ன தொழில் பண்றீங்க…” என்று கேட்டார்.

“பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்” என்று வாலி சொன்னதும், “அப்படியா!” என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.

பிறகு, “கிராமபோன் ரிக்கார்டுலே யாராவது பாடியிருக்காங்களா?” என்று கேட்டார்.

டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.

“சபாஷ்! சபாஷ்! டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க” என்றார் சி.எஸ்.ஜெயராமன்.

டி.எம்.எஸ். பாடிய – “கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்”, “ஓராறு முகம்” ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய “இசையால் எதுவும் வசியமாகும்” என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார் வாலி.

பரவசப்பட்டுப்போன ஜெயராமன், “உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது” என்று கூறிவிட்டு,

“தம்பி! உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க” என்றார்.

“அண்ணே…!” என்று குறுக்கிட்டார், வாலி.

ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்: “தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்” என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன்,

வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, “அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை… இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.

எவனோ ஒருத்தன் வாலின்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் – ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க” என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது. டிரைவர் டீ குடிக்கப்போனார்.

வாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

திடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், “டேய்! கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா… வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்” என்றபடி ஓடிவந்தனர்.

ஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, “நல்வாழ்த்துகள் – வாலி” என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தார், வாலி.

இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் ஷாக் அடித்தவர் போல சிலையானார்.

மாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, “தம்பி! நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா?” என்று பாசத்தோடு கேட்டார்.

“என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே! அதனால்தான் நானும் சொல்லலே” என்றார் வாலி.

சிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, “காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி” என்று வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment