சென்னையில் 3 நாட்களில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!

சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகளை தனியாக சேகரித்து, கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 23-ம் தேதி, 7.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், அக்டோபர் 24 ம் தேதி 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், அக்டோபர் 25 ம் தேதி 139.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment