பைக் சாகசம் செய்த மாணவருக்கு கிடைத்த நூதன தண்டனை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் எதிரே புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.

இதில், பின்னால் அமர்ந்து வந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பைக்கின் மீது ஏறி நிற்க முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதனால் கைதுக்கு பயந்த மகேஸ்வரன் தப்பியோடிய நிலையில், நேற்று காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வார காலம் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டுமென்ற நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காரைக்குடி கல்லூரி சாலையில் நின்று சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் மாணவர் ஈடுபட்டார்.

Comments (0)
Add Comment