இலங்கையில் வறுமையால் வாடும் 1 கோடிப் பேர்!

இலங்கையைப் புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.

வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.

இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் நாட்டில் சுமார் 1 கோடிப் பேர் வறுமையில் தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த நிலையில், தற்போது அது சுமார் 1 கோடியை எட்டியிருப்பது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதேபோல நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர், அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் இந்த அவல நிலை ஏற்பட்டிருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தா அதுகோரலா கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நாட்டில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு இலங்கையைச் சேர்ந்த மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருவது தெரியவந்திருக்கிறது.

அந்தவகையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.

இன்னும் 800 பேர் வரை இடம்பெயரக் காத்திருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment