ஒற்றுமை யாத்திரையில் ராகுலுடன் சோனியா நடைபயணம்!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தமிழகம், கேரளா வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 30-ம் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

தசரா திருவிழாவுக்காக 4, 5-ம் தேதிகளில் கர்நாடகாவில் விடுமுறை அளிக்கப்பட்டதால் ராகுல்காந்தி யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மைசூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இதற்கிடையே உடல்நலக்குறைவுக்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க முடிவு செய்தார்.

இதற்காக அவரும் 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்துக்கு புறப்பட்டு வந்தார். கூர்க் பிராந்தியத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று காலை மாண்டியா மாவட்டத்துக்கு புறப்பட்டு வந்தார்.

அங்கு ஜகன்னஹள்ளி என்ற இடத்தில் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். அவருடன் சோனியா காந்தியும் இணைந்து கொண்டார்.

பாண்டவபுரம் தாலுகாவில் இருந்து ஏராளமான காங்கிரசார் அந்த நடைபயணத்தில் பங்கேற்றனர்.

சோனியா நடைபயணம் தொடங்கியதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

இதனால் சோனியா புன்னகை ததும்ப புத்துணர்ச்சியுடன் நடைபயணத்தை மேற்கொண்டார்.

சோனியாவின் ஒரு பக்கத்தில் ராகுல் காந்தியும், மற்றொரு பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நடந்து வந்தனர். சோனியாவை பார்ப்பதற்கு வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். 

சோனியா மேற்கொண்டுள்ள நடைபயணம் அடுத்து தும்கூர், சித்தர துர்கா, பல்லாரி, ரெய்ச்சூர் மாவட்டங்கள் வழியாக தெலுங்கானாவுக்குச் செல்ல இருக்கிறது. தொடர்ந்து சோனியா நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக 2016-ம் ஆண்டு வாரணாசியில் ரோட் ஷோ நடத்திய பிறகு சோனியா எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் அவர் முதன்முதலாக நடைபயணத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment