கடமையைச் செய்வோம் கலங்காமலே…!

நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே

புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !

(நாளை…)

கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

(நாளை…)

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா

விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும்
நியாயங்கள் சாவதில்லை

(நாளை…)

கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு
தோற்காத நியாயம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்

சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

(நாளை…)

கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

(நாளை…)

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1976-ம் ஆண்டு வெளிவந்த உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்.

Comments (0)
Add Comment