ராமர் பூமியில் வெளியிடப்பட்ட ‘ஆதிபுருஷ்’ டீசர்!

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தப் திரைப்படத்தின் டீசர் மற்றும் பிரம்மாண்டமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

கதையின் நாயகனான ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரம்மாண்டமான ஒலி ஒளி அமைப்பு, லேசர் விளக்குகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் டீசரும், போஸ்டரும் வெளியிடப்பட்டது.

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் போஸ்டர், 50 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்டு, சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

ராமபிரான், மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்பதும், தசரத சக்கரவர்த்தி சரயு நதிக்கரையில் மேற்கொண்ட புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாக பிறந்தவர்.

நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போட்டியில், வானர படைகளின் உதவியுடன் தீமையின் வடிவமான இராவணனை ராமர் வென்றார் என்பதுதான் ராமாயணம்.

படத்தின் டீசரில் ராமனாக நடித்திருக்கும் நடிகர் பிரபாஸ், நீருக்கடியில் தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சியும், பனி படர்ந்த பிரதேசத்தில் ராவணனாக நடித்திருக்கும் சயீப் அலி கான் தோன்றும் காட்சியும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

ராமாயண காவியத்தை தற்போதைய இணைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘ஆதி புருஷ்’ தயாராகி இருப்பதால் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Comments (0)
Add Comment