நடிப்பில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சத்யராஜ்!

நடிகர் சத்யராஜ் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தவர்.

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் சென்னை வந்து சட்டம் என் கையில் படம் மூலம் தமிழ்த் திரைக்கு நடிகராக அறிமுகமானார்.

தன் உறவினரும் பிரபல நடிகருமான நடிகர் சிவகுமார் மூலம் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ஏணிப்படிகள், ஆணிவேர், தீர்ப்புகள் திருத்தப் படலாம், ராமன் பரசுராமன், முதல் இரவு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜிக்கு 1983-ல் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் மோகன், விஜயகாந்த், நளினி நடிப்பில் வெளிவந்த ‘நூறாவது நாள்’ படம் திருப்பு முனையாக அமைந்தது.

தொடர்ந்து 24 மணி நேரம், தம்பிக்கு எந்த ஊரு, ஜனவரி 1, நாளை உனது நாள், செயின் ஜெயபால், சந்திப்பு, காக்கிச் சட்டை, நான் சிகப்பு மனிதன், பிள்ளை நிலா, தங்கைகாக ஓர் கீதம் என பல படங்களில் நடித்துள்ளார்.

1984-ல் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த பகல் நிலவு படம் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

கடலோரக் கவிதைகள், மக்கள் என் பக்கம், அண்ணா நகர் முதல் தெரு, வேதம் புதிது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, திறமை, என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, வாழ்க்கைச் சக்கரம், நடிகன், திருமதி பழனிச்சாமி என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போதும் பாகுபலி, தம்பி, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் முக்கியத் துவம் வாய்ந்த வேடங்களில் நடித்திருக்கிறார்.

மர்ம மனிதன் என்ற திரைப் படத்திற்கு கதை எழுதி உள்ளார். லீ, நாய்கள் ஜாக்கிரதை, சத்யா (சிபிராஜ் நடித்தது) போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
வில்லாதி வில்லன் படத்தை இயக்கியுள்ளார்.

சுந்தர்.C. நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் படத்தில் இசையமைப்பாளர் தீனா அவர்கள் இசையில் சுப்பையா சுப்பையா என்ற பாடலையும் பாடியுள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் சத்யராஜ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment