அரசியலைத் தாண்டி நட்புப் பாராட்டியவர் எம்.ஜி.ஆர்!

– தமிழறிஞர் ம.பொ.சிவஞானம்

“நினைவிலுள்ளதை வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். 1956 ஜூன் 26, சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன்முதலாக புரட்சித் தலைவரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது. அதற்கு முன்னே சந்தித்து இருக்கலாம். அது சரியாக நினைவில் இல்லை.

கோலாகலமாக நடந்த அந்த விழாவில் நம்முடைய தலைவர் அவர்கள் கலந்து கொண்டு எனக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வாழ்த்திலே அவர் ஒரு பட்டத்தையும் எனக்குத் தந்தார்.

ம.பொ.சி என்ற மூன்றெழுத்துக்கு விளக்கமும் கூறினார்.

தமிழை மழை போல் பொழியும் சிவஞானம் என்று அவர் கூறியபோது அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அவ்வளவு பேருடைய கரங்களும் ஒலித்து மண்டபத்தையே அதிரச் செய்தது இன்றும் என் கண் முன்னே காண முடிகிறது. காதுகளால் கேட்க முடிகிறது.

அவர் அப்படிச் சொன்ன பின்பு எல்லோரும் அப்படிச் சொல்லுவது வழக்கமாகி விட்டது. அந்தப் பட்டத்திற்குப் பிறகு எனக்குப் பல பட்டங்கள் கிடைத்திருந்தாலும், நம்முடைய முதல்வர் அவர்கள் அந்த நாளிலே தந்த ‘மழை போல் பொழியும் சிவஞானம்’ என்பது எனக்கு ஒரு தனிச் சிறப்பைத் தந்தது என்பதில் ஐயமில்லை.

எனது பிறந்தநாள் விழாவிலே என் மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் பல நடந்தன. அவற்றுள் ஒன்று எனக்கு சுமார் 33 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பைத் தந்ததாகும். மற்றொன்று, பல பேரறிஞர்கள் வாழ்த்துரை கூறியது.

இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் என்னுடைய பெயர்க்குரிய தலைப்பெழுத்துக்களுக்கு வியாக்யானம் கூறி நம்முடைய மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இன்னும் என் மனதிலே பதிந்திருக்கிறது.

அதன்பின் நாங்கள் அவருடைய ஸ்டுடியோவிலும், வேறு பல பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம்.

அவர் முதல்வராவதற்கு முன்பு நாங்கள் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள்போல ஒரே குடும்பத்தவர்கள் போலவே பழகிப் பேசி வந்திருக்கிறோம்.

நான் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த காலத்திலே கூட எங்கள் இருவரிடையே பகைமை தோன்றியதே கிடையாது. காரணம் கட்சி வெறிக்கு அப்பாற்பட்ட கலைஞராக அவர் இருந்ததுதான்.

அதற்குப் பிறகு அவர் தனியாக ஒரு கட்சியைத் துவக்கியபோது நான் அந்தக் கட்சிக்கு மாறுபட்டு பிரச்சாரம் செய்து வந்தேன். மிகக் கடுமையாகக் கூடச் செய்தேன் என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அப்போது அவரை பத்திரிக்கை நிருபர்கள் சந்தித்து, ம.பொ.சி தங்கள் கட்சியைத் தாக்குகிறாரே என்று கேட்டபோது “அவர் என் மதிற்பிற்குரிய பெரிய தலைவர். அவரைப்பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை” என அவர் சொன்னது, அவருடைய பண்பாட்டைக் காட்டியது என்பதை நான் நன்றாக உணர்கிறேன்.

அவர் மாபெரும் கலைஞர் என்பதை என் மனதில் பதியச் செய்தது இன்னொரு நிகழ்ச்சி மூலம்.

எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆரை சுட்ட அந்த நேரத்தில் “அண்ணே என்ன காரியம் செய்து விட்டீர்கள்” என்று அவர் கேட்டதாகப் பத்திரிக்கைகளில் படித்தேன்.

அது எனக்கு மகிழ்ச்சியையும், மற்றோரு பக்கத்தில் வியப்பையும் தந்தது. பெரிய புராணத்தில் தன்னைத் தாக்கிய வஞ்சகனைப் பற்றி தன்னுடைய சீடனிடம் கூறிய போது, “இவர் நமர்” என்றார் 63 அடியார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்.

அதுபோல் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னை சுட்டுக்கொல்ல முயன்றவரையும் “அண்ணே” என்று அழைத்த பண்பாடு என்னைக் கவர்ந்தது.”

Comments (0)
Add Comment