கோவையில் தந்தை பெரியார் உணவகம் மீது தாக்குதல்!

– இந்து முன்னணியினர் 6 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதி கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலைத் திறக்க திட்டமிட்டு இருந்தார்.  அதற்கான பணிகளில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அங்கு வந்த ஒரு கும்பல் தந்தை பெரியார் பெயரில் உணவகம் திறப்பது குறித்து விமர்சித்ததோடு இது குறித்து ஹோட்டல் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் அந்தக் கும்பல் கடையை அடித்து நொறுக்கியும் கடையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணி செய்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கடையை சூறையாடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 21 வயதான அருண் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காரமடை காவல்துறையினர்,

தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரவிபாரதி,சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிராபகரன் என 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் பேரில் திறக்க இருந்த உணவகத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment