ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் எத்தனை பேர்?

ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு!

நாட்டில் கொரோனா 2-வது அலையின்போது அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இவற்றில் பிராண வாயு முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது.

இதுபற்றி நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.

இதுபற்றி சமாஜ்வாடி உறுப்பினரான ராம் கோபால் யாதவ் தலைமையிலான அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா 2-ம் அலையின்போது பிராணவாயு பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இதனை கவனிக்காமல் அரசு அலட்சியமுடன் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அமைச்சகம், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி தணிக்கை செய்து, கொரோனா உயிரிழப்புகளை ஆவணப்படுத்த வேண்டும். அது அரசின் பொறுப்புள்ள உணர்வை வெளிப்படுத்தும்.

ஒரு முன்னெச்சரிக்கையான கொள்கை உருவாக்கமும் செய்வதுடன், சுகாதார அவசரநிலை ஏற்படும் சூழலில் அதனை எதிர்கொள்ளவும் அது உதவும் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கொரோனா பாதித்து பிராண வாயு பற்றாக்குறையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முறையான இழப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இதற்கு அரசு முகமைகளிடம் இருந்து அதிகளவில் வெளிப்படை தன்மையும், பொறுப்புணர்வும் எதிர்பார்க்கப்படுகிறது என குழு தெரிவித்து உள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என கோரி நீண்ட வரிசையில் நோயாளிகளின் குடும்பத்தினர் நின்ற பல்வேறு சம்பவங்கள் உள்ளது.

பல மருத்துவமனைகளில் பிராணவாயு தீர்ந்து விட்டது என்றும் ஒரு சில மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்ற சூழலை குழு அறிக்கையானது குறிப்பிட்டு உள்ளது.

கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உறுதி செய்யப்பட்ட உயிரிழப்புகள் பற்றி தெரிவிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் முன்பு வேண்டுகோள் விடுத்தது.

எனினும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அதற்கு பதிலளித்து இருந்தது.

எனினும், மாநிலங்களுடன் அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொரோனா 2-வது அலையில் பிராண வாயு பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி தணிக்கை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment