ஜெயமோகன் கதையில் உருவாகும் புதிய திரைப்படம்!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்குகிறார்.

சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக ஜெயமோகனின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் கவனம் காட்டியுள்ளார்கள்.

ஆஹா ஒடிடியின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் தாக்கூர் பேசும்போது, “மிக நேர்த்தியான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள், உறுதியாக பார்வையாளர்களைச் சென்றடையும்.

டர்மெரிக் மீடியாவுடன் கரம் கோர்ப்பதில் பெருமிதம் கொள்கிறோம். மிகச்சிறந்த எழுத்தாளரான ஜெயமோகன் படைப்பை தழுவிய திரைப்படத்தை, ஆஹா ஓடிடி ஒரிஜினலில் வெளியிட மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் அனிதா மகேந்திரன், “அனைத்து தரப்பு மக்களை மகிழ்விக்கும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களை வழங்கும் ஆஹா தமிழ் ஓடிடி, 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது.

அல்லு அரவிந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். தரமான, வெற்றிகரமான திரைப்படமாக மாற்ற முடியுமென்பதில் சமரசமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

இந்தப் படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக அமையும்” என்றார்.

Comments (0)
Add Comment