புதுமைப்பெண் திட்டம் உயர்கல்விக்கு வழிவகுக்கும்!

– டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ‘புதுமைப் பெண்’ திட்டத் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும், அதை கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சமுதாயத்தின் அடிப்படை ஆசிரியர்கள்தான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தபோது டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டு, தமிழ்நாட்டில் இதே போன்று கட்டமைப்புடன் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் 6 மாதத்துக்குள் இதை இங்கு கொண்டு வந்துள்ளார். இதற்காக முதலமைச்சரை பாராட்டுகிறேன்.

டெல்லியை போல் தகைசால் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

புதுமைப் பெண் திட்டம் பெண் கல்விக்கான புரட்சிக்கரமான திட்டம். இந்த திட்டம் மூலம் ஏராளமான மாணவிகள் உயர்கல்வி பயில வழி வகுக்கும்.

தமிழ்நாடு, டெல்லியை போன்று அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து நல்ல விசயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர் திறமை இருந்தும் வறுமை காரணமாக தங்கள் படிப்பை கைவிடும் சூழல் உள்ளது.

ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம்.

இந்தியா முழுவதும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறிதான். எனவே நல்ல, தரமான இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்.

அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழை-எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வார்கள்? அப்படி இருந்தால் நாடு வளராது.

இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை தொடங்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன்.

நானும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லிக்கு வருமாறு மு.க.ஸ்டாலினை அழைப்பேன்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment