ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்: இந்தியா சாதனை!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி 50 ரன்களைக் கடந்து அசத்தியது. ஜடேஜா 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்டியா 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார்.

ரோகித் சர்மா இதுவரை 133 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்துள்ளார்.

3,497 ரன்களை எடுத்து கப்தில் 2-வது இடத்திலும், 3,343 ரன்களுடன் விராட் கோலி 3-வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல், மூன்று வித சர்வதேச கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Comments (0)
Add Comment