சீதா ராமம் – கிளாசிக் லவ் லெட்டர்!

போர்க்கள பின்னணியில் அமைந்த காதல் திரைப்படங்கள் பல ’உலக சினிமா’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கின்றன.

போலவே, ‘டைட்டானிக்’ போன்ற பல கோடி பேர் ரசித்த திரைப் படைப்புகள் என்றென்றைக்குமான ‘கிளாசிக்’ அந்தஸ்தை பெற்றிருக்கின்றன.

அப்படியொரு பெருமை கிடைத்துவிட வேண்டுமென்ற வேட்கையுடன், வெகு அரிதாகவே இந்திய திரையுலகில் முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன.

அவற்றுள் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ஹனு ராகவபுடி இயக்கியுள்ள ‘சீதா ராமம்’.

‘க்ளிஷே’வான காதல் கதை!

பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவுகின்றனர் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள். இந்த சம்பவம் 1960களில் நடக்கிறது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து லண்டனில் இந்தியக் கொடி பறக்கும் ஒரு கார் மீது மதுபானத்தை ஊற்றி தீ வைக்கிறார் அப்ரீன் (ராஷ்மிகா மந்தனா) என்ற பாகிஸ்தானிய இளம்பெண்.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் ’சீதா ராமம்’ என்ற டைட்டிலுக்கு என்ன சம்பந்தம்? அதைத்தான் சொல்லப் போகிறேன் என்று ‘பிளாஷ்பேக்’ உத்தியை பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி.

பாகிஸ்தானிய ராணுவத்தில் பணியாற்றிய உமர் தாரிக்கை (சச்சின் கடேகர்) சந்திக்கச் செல்கிறார் அவரது பேத்தியான அப்ரீன்.

அவர் இறந்துபோன தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைபவர், இந்தியாவில் ஹைதராபாதை சேர்ந்த சீதா மகாலட்சுமி எனும் பெண்ணுக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு சென்று சேர்த்தால் மட்டுமே அவரது சொத்துகள் கிடைக்கும் என்று வழக்கறிஞர் சொல்வதைக் கேட்டு மேலும் அதிர்கிறார்.

சீதாவைத் தேடும் பயணத்தில், ராம் (துல்கர் சல்மான்) என்பவர் பற்றி தெரிய வருகிறது.

இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவில் லெப்டினண்ட் ஆக பணியாற்றியவர் ராம். உறவுகள் ஏதுமற்றவர். ஒருமுறை காஷ்மீரில் நடைபெறவிருந்த பெரும் கலவரத்தை தடுத்த காரணத்திற்காக, அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதுமிருந்து அவருக்கு கடிதங்கள் வருகின்றன. அவற்றில், சீதா என்ற பெண் ராமை தனது கணவராக வரித்து எழுதிய கடிதங்களும் அடங்கியிருக்கின்றன.

ஒருகட்டத்தில், சீதாவைத் தேடி ராம் ஹைதராபாத் செல்கிறார். அவரை நேரில் சந்தித்து தன் காதலைச் சொல்கிறார்.

சீதா (மிருணாள் தாகூர்) என்பவர் யார்? அவர் ராமை உண்மையிலேயே காதலித்தாரா? அவர்கள் இருவருக்குமான காதல் கதை பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ராணுவ அதிகாரிக்கு எப்படி தெரிய வந்தது என்று நீள்கிறது ‘சீதா ராமம்’.

படத்தில் பல காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கும் வகையில் ’க்ளிஷே’க்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவை படமாக்கப்பட்ட விதம் நமக்குள் கொஞ்சம் கூட அலுப்பை விதைக்கவில்லை.

இன்னொரு ‘ஜெமினி’!

உண்மையிலேயே அறுபதுகளில் இந்த படத்தை உருவாக்கியிருந்தால், கண்டிப்பாக ஜெமினி கணேசனை நாயகனாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

அந்த அளவுக்கு இன்னொரு ‘ஜெமினி’யாக திரையில் காதலைப் பொழிந்திருக்கிறார் துல்கர் சல்மான்.

ஏற்கனவே ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஜெமினி பாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் மேற்கொண்ட ‘ஹோம் ஒர்க்’ இதில் கை கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

நாயகியாக வரும் மிருணாள் தாகூர் முதல் பாதியில் அழகுப் பதுமையாகத் தோற்றமளித்ததற்கு மாறாக, இரண்டாம் பாதியில் முகத்தில் சோகத்தை அப்பிக் கொள்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை என்று சொல்லிக்கொள்ள பல காட்சிகள் வாய்த்திருக்கின்றன.

தெலுங்கு நடிகர் சுமந்துக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், ஒரு முக்கியமான பாத்திரமாக வந்து போகிறார்.

சீனியர்களான சச்சின் கடேகர், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, பூமிகா, ’பொம்மலாட்டம்’ ருக்மிணி, கவுதம் மேனன் என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

தெலுங்கு நகைச்சுவை நடிகர்களான சுனில், பிரியதர்ஷி கூட இரண்டு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர்.

வெண்ணிலா கிஷோர் நம் சந்தானம் போல சில காட்சிகளில் ‘ஒன்லைனர்’களால் நம்மை சிரிக்க வைக்கிறார். போலவே, இளம் யக்குனர் தருண் பாஸ்கரும் இதில் காமெடியை முயற்சித்திருக்கிறார்.

இப்படத்தின் பெரும் ஆச்சர்யம் ராஷ்மிகா மந்தனா. ’சச்சின்’ ஜெனிலியா போல லூசுப்பெண்ணாகவே பல படங்களில் வந்து போனவர், இதில் அப்ரீன் எனும் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இது அமைந்திருக்கிறது.

படத்தின் ஒவ்வொரு பிரேமையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கின்றனர் பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

மிக நேர்த்தியாக காட்சிகளை அடுக்கியிருக்கிறது கோட்டகிரி வெங்கடேஸ்வராவின் படத்தொகுப்பு.

சுமார் அறுபது மற்றும் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைப் பிரதிபலிப்பதில் விஎஃப்எக்ஸ் போலவே பைசல் அலிகானின் கலை வடிவமைப்பும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

காட்சியோடு ஒன்றவைக்கும் பின்னணி இசை மட்டுமல்லாமல் ’பிரியாதே’, ‘குறுமுகில்களை’, ‘ஹே சீதா’, ’கண்ணுக்குள்ளே’ என்று நான்கு காதிற்கினிய பாடல்களையும் தந்து வசீகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். நீண்ட நாள் கழித்து ஒரு மெலடி ஆல்பம் கேட்ட திருப்தியைத் தருகின்றன பாடல்கள்.

பாடல்கள், வசனங்களில் எளிமையையும் இயல்பையும் கலந்து ஒரு அழகான காதல் திரைப்படம் பார்க்கும் உணர்வை அதிகப்படுத்தியிருக்கிறார் மதன் கார்க்கி.

நீளம் ரொம்ப அதிகம்!

பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் ‘ட்விஸ்ட்’ இடைவேளையில் வந்தபோதும், பின்பாதி முழுக்க ராம் சீதா காதல் என்னவானது என்பதை நோக்கியே திரைக்கதை நகர்கிறது.

அந்த இடங்களில் கொஞ்சம் கத்திரி போடாததால் படத்தின் நீளம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.

பரபரவென்ற திரைக்கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் கொஞ்சம் கூட திருப்தியைத் தராது.

முழுக்க முழுக்க தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், ‘டப்பிங்’ கொஞ்சம் கூட அலுப்பைத் தரவில்லை.

கதை நிகழும் களம் காஷ்மீர், ஹைதராபாத் என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்றபடி மாற்றப்படாவிட்டாலும், கடிதம் முதலான மொழி தொடர்பான அம்சங்களில் தமிழையே பயன்படுத்தியிருப்பது அழகு.

இரண்டொரு காட்சிகளில் மட்டுமே தெலுங்கு எழுத்துகள் ‘ஜாங்கிரி’களாக நம் கண்களை உறுத்துகின்றன.

அதே சிரத்தையை படத்தின் டைட்டில் காட்சிகளில் பயன்படுத்தாதது பெரும் குறை. தமிழில் நல்ல எழுத்துரு படக்குழு கையில் சிக்கவில்லை போலிருக்கிறது.

இடைவெளியில்லாமல் இறுக்கி அணைக்கும் இன்றைய ட்ரெண்டுக்கு நேர் எதிரான ஒரு காதல் ஜோடி, அவர்களுக்கிடையே மெல்ல அரும்பும் காதல், அது என்னவானது என்ற முடிச்சை நோக்கி நகரும் திரைக்கதை என்று ஒரு ‘கிளாசிக்’ பூச்சோடு முழுப்படத்தையும் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி.

திரைக்கதையில் அவருக்கு துணை நின்றிருக்கிறார் ராஜ்குமார் கண்டமுடி. பார்த்து பார்த்து சலித்தவையாக சில காட்சிகள் அமைந்தாலும், நல்ல ‘காஸ்டிங்’ இயக்குனருக்கு கை கொடுத்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒரு பீல்குட்டான காதல் கதையை பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று அங்கலாய்ப்பவர்களுக்காகவே, எவ்வகையிலும் ஆபாசம், வன்முறை இல்லாத ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் ஹனு ராகவபுடி.

ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்பதையும் மீறி பெருங்கூட்டத்தை தியேட்டர்களுக்கு வரவழைப்பதாக அமைந்திருக்கிறது ‘சீதா ராமம்’. ஒரு ‘கிளாசிக் லவ் லெட்டர்’ ஆக இப்படத்தை உருவாக்கியதற்கு பாராட்டுகள்!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment