5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.29 கோடி!

தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டது.

அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் வாக்குகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975 ஆகும். அதாவது 1.06 சதவிகித வாக்குகள் நோட்டாவுக்காக பதிவாகியுள்ளன.

சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்ரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 வாக்குகள் தான், நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச வாக்குகள் ஆகும்.

மிசோரமில் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 வாக்குகள்தான் குறைந்தபட்ச வாக்குகளாகும்.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 வாக்குகள் தான் அதிகபட்ச வாக்குகள்.

லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 வாக்குகள் தான் குறைந்தபட்ச வாக்குகள் என்பது அந்த ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

Comments (0)
Add Comment