சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி!

மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அனைத்து மாநிலங்களிலும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையடுத்து உளவுப் பிரிவு காவல்துறையினர் தமிழகம் முழுவதும் சந்தேக நபர்கள் ஊடுருவலைக் கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

லாட்ஜூகள், தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகப்படுபவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு கைது நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.

உளவுத்துறை எச்சரிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment