5 ஜி: ஏலத்தொகை ரூ.1,49,855 கோடியைத் தாண்டியது!

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் 16 சுற்று ஏலம் முடிந்துவிட்டதாகவும், நேற்று 17வது சுற்று ஏலம் தொடங்கப்படவுள்ளதாகவும் ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருந்தது. 2-ஆம் நாள் முடிவில் இந்த தொகை ரூ.1,49,454 கோடி வரை கேட்கப்பட்டது.

அதை தொடந்து 3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1,49,623 கோடியை எட்டியது.

நான்காம் நாளான நேற்றைய ஏலத்தின் முடிவில், 23 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டியுள்ளது. இன்னும் முடிவு எட்டப்படாததால் 5-வது நாள் ஏலம் நடைபெறும் எனத் தெரிகிறது.

அதிகபட்ச டெபாசிட் தொகையாக ரூ.14 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் ஜியோ கொடுத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏா்டெல் ரூ.5500 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இதன் அடிப்படையில், தகுதி புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Comments (0)
Add Comment