கலாமை நினைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமை கொள்கிறோம்!

– குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்திய இஸ்ஸாமிய கலாசார மையம் சார்பில் நான்காவது ஆண்டாக நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு கருத்தரங்கில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், “அப்துல் கலாம், சாதாரண மக்களுக்கும் அறிவியல் மீதான ஆா்வத்தைத் தூண்டுவது அவருடைய தலையாய பணியாக இருந்தது. இதை ஓா் அமைப்பாக அவா் செயல்படுத்தினார்.

கலாம் எழுதிய நூல்களுள் ’புதிய இந்தியாவை உருவாக்குதல் என்ற நூலில், துறவிகள் மற்றும் புனிதா்களிடமிருந்து கற்றல் என்ற அத்தியாயம் உள்ளது. அந்த அத்தியாயத்தில், தான் சந்தித்த துறவிகள், புனிதா்கள் குறித்த தனது பார்வையை மரியாதையுடன் முன்வைத்துள்ளார். பள்ளி மாணவ மாணவியருடனான அவரது சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இளம் தலைமுறையினர் நாட்டின் பொற்காலத்தை உருவாக்குவார்கள் என்பதில் உறுதியான நம்பிக்கையை கலாம் கொண்டிருந்தார்.

கலாமின் நற்பண்பும் அவரது புகழும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. தேசத்தின் மீது தீராத அன்பு வைத்திருந்த சிறந்த குடிமகனான கலாமை நினைத்து ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

Comments (0)
Add Comment