மழைக்காலக் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது. 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மழைக்கால கூட்டத்தொடர், துணை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

Comments (0)
Add Comment