மாமனிதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனு ராமசாமி!  

தமிழ் ஓடிடி தளம் வரிசையில் தற்போது கோலோச்சி கொண்டிருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக பார்க்கலாம்.

இந்த மகிழ்ச்சியை ஒட்டி படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி படம் பற்றியும் பத்திரிகையாளர்கள் பற்றி உருக்கமாக பேசினார்.

அப்போது, “கலாப்ரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது.

அப்படி காயத்துடன் இருந்த ஒரு படைப்பை, உங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன்.

நீங்கள் இல்லையென்றால் இந்த படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றி தான்.

திரையரங்குகளில் இந்த படம் நன்றாக போனது ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது, அந்த நேரத்தில் தான் ஆஹா ஓடிடி வந்தது.

அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரும் பார்த்து பாராட்டுகிறார்கள்.

இதற்கு தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

திரையரங்கில் என்ன குவாலிட்டியில் படம் இருந்ததோ அதே போல் ஓடிடியிலும் உள்ளது. தயாரிப்பாளர் யுவன் அவர்களுக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

படம் பற்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூறும்போது, இந்தப் படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகி விடுவான்.

மாமனிதன் குறித்து என்னிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாபாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை. சீனு ராமசாமி சார் போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை.

இந்தப் படம் நான் டப்பிங் பண்ணும் போது பார்க்கையில் அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப்படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும் என்றார்.

ஸ்டுடியோ 9 பிரசாத் பேசியதிலிருந்து…

ஆர்.கே. சுரேஷ் அவர்கள் ஷீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. மாமனிதன் ஒரு அருமையான படைப்பு. மக்கள் செல்வன், மக்கள் இயக்குனர், யுவன் ஆகியோர் தான் இந்தப் படத்தை வெளியிட முக்கிய காரணம்.

தர்மதுரை போல் இந்தப் படத்தையும் மக்களிடம் சேர்த்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தான் ஆர் கே சுரேஷ் இந்தப் படத்தை வெளியிட்டார்.

திரையரங்கில் மக்கள் கொண்டாடிய ஒரு படத்தை ஆஹா இப்போது உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறது என்று கூறினார்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment