ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!

ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது.

தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இவர்களின் நிலை அன்று என்ன?

இன்று என்ன?

முள்ளிவாய்க்கால் போரில் 2009 இல் இருந்த பொருளாதார நெருக்கடி மிக மோசமானது. இப்போதுள்ள நெருக்கடியை விட 10 மடங்கு அதிகம் என்று சொல்லலாம்.

ஒரு கிலோ அரிசி 3000 க்கும் கிடைக்கவில்லை. பணத்துக்கு பெறுமதி இல்லை. அரச படைகள் குண்டுவீசி காயப்படுத்தியோருக்கு மருத்துவம் செய்ய மருந்தில்லை.

மிகக் குறுகிய நிலப் பரப்புக்குள் பல லட்சம் மக்கள் வரிகளில் அடக்கி விட முடியாத இன்னல்களை சுமந்தபடி இன விடுதலை தாகம் வேண்டி ஒரு தலைவனையும் அவர் பிள்ளைகளையும் நம்பி உயிரையும் கையில் பிடித்தபடி அலைந்தார்கள்.

மிக மோசமான போர் கண்களுக்கு முன்னே ஒவ்வொரு நொடியும் சாவு ஆனால் அந்த மக்கள் ஒரு தலைவனையே நம்பி இருந்தார்கள்.

நம்பி இருந்தவர்கள் எல்லோரும் தங்களை கைவிட்ட போதிலும் தன்னை நம்பியிருந்த மக்களுக்காக இறுதி நாள்வரை உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து ஒரு தலைவன் போராடினர்.

இறுதிக்கணம் வரை கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தார்.

தாங்கள் இறுதி வரை நம்பியிருந்த தலைவனும் பிள்ளைகளும் இவ்வளவு பேரழிவுக்கு பின்னர் கூட விடுதலையை பெற முடியாது போய் விட்டதே,

இவர்களை நம்பியிருந்தது இவ்வளவு இழப்புகளை சந்தித்து விட்டோமே என்ற ஏக்கத்தோடு வெற்றுடலாக நந்திக்கடலை கடந்த மக்கள் அத்தனை இழப்புகளுக்கு பின்னரும் இன்னும் அந்த மனிதரை தலைவனாக கொண்டாடும் இனம்.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Comments (0)
Add Comment