குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் விறுவிறு!

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் இந்தியா முழுவதும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

பா.ஜ.க. தரப்பு வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பு வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டிக் களத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் இரண்டு அவைகளின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அந்தந்த மாநிலங்களுக்கு வாக்குப் பெட்டிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்குகிறது.

தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை செயலக வளாகத்தில் இருக்கும் குழு கூட்ட அறையில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையொட்டி டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்போது குழுக் கூட்ட அறைக்கு அந்த வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment