‘காளி’ பட சர்ச்சை: லீனா மணிமேகலை விளக்கம்!

கவிஞர் லீனா மணிமேகலை, பறை, தேவதைகள், பலிபீடம் உட்பட சில ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் ‘காளி’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல்தோற்ற போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கிறார்.

இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது, இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பாஜகவினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும்கூறி வருகின்றனர்.

இதையடுத்து ட்விட்டரில், #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

இந்நிலையில் வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், லீலா மணிமேகலை மீதுடெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள லீனா மணிமேகலை ‘‘ஒரு மாலைப் பொழுது, டொரன்டோ மாநகரத்தில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம்.

படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai” ஹேஷ்டேக் போடாம “love you leena manimekalai” ஹேஷ்டேக் போடுவாங்க’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment