தஞ்சையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தனம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் அந்தப் படத்தில் கார்த்தி வந்தியதேவனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும் நடிக்கின்றனர்.

இவர்களைத் தவிர ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பொன்னின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் டீசரை ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடுகின்றனர். அந்த வெளியீட்டு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைத்து அதில் டீசரை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களை தவிர இன்னும் சில திரைப்பட கலைஞர்களும் அழைக்கப்படவுள்ளனர்.

டீசரைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் முதல் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தொடர்ந்து நடத்த இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டிருக்கிறார்.

பொதுவாக பெரும்பாலான படங்களின் டீசர் வெளியீட்டு விழாக்கள் சென்னையை மையமாக வைத்து நடைபெறும். ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தஞ்சை மண்ணுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், படத்தின் டீசரை அங்கிருந்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment