ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும்.

தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29-ம் தேதி. ஜூன் 30-ம் தேதி பரிசீலனை செய்யப்படும்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாகும்” என விளக்கமளித்தார்.

Comments (0)
Add Comment