நாகேசுக்கு முதலில் கிடைத்த வேடம் சர்வர்!

நாகேஷின் தொடக்க கால திரைப்பயண அனுபவம்:

“தீனதயாளு தெருவில் அப்போது நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய ஒரு கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் வைத்திருந்தேன்.

ஒருநாள் வாகினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். ஜகன்னாதன் என்கிற புரொடக்ஷன் மேனேஜர் என்னைப் பார்த்துவிட்டு,

“நாகேஷ்! வாகினியிலே தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரு படம் எடுக்கிறோம் (மனிதன் மாறவில்லை & குண்டம்மா கதா).

ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப் போகிற காட்சியின் துவக்கத்தில், டேபிள்களை ஒரு சர்வர் துடைப்பது போல ஒரு ஷாட் இருக்கிறது. அந்த ஒரு சீனில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்? ஐந்நூறு ரூபாய் போதுமில்லையா?” என்றார்.

நான் ‘சரி’ என்றேன். காத்திருக்கச் சொன்னார். அப்போது, நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். வயதான மனிதர். அவர் வில் போல உடலை பின்னுக்கு வளைத்து, நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும்தான் இருந்தது.

என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா? கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, ‘ரொம்பக் கஷ்டப்பட்டு சிகரெட் பெட்டியைத் தூக்கிட்டுப் போறாப்போல இருக்கு. என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு வரேன்!’ என்றேன்.

அவர், ‘ஹ… ஹ…’ என்று சுருக்கமாகச் சிரித்து விட்டு, தன் பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன்.

ஜகன்னாதன் ‘ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

நான் ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டுக் கொண்டேன். தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக்கொண்டேன்.

டேபிளில் இருந்த ஒரு தம்ளரை மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளைச் சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வந்ததும் கீழே வந்த டம்ளரை லாகவமாகப் பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.

‘சபாஷ்! ரொம்ப நல்லா பண்ணறியேப்பா!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பேரதிர்ச்சி! நான் சற்று முன், செட்டுக்கு வெளியே நடையைக் கேலி பண்ணினேனே அதே மனிதர்! வாகினி ஸ்டூடியோவின் அதிபரான சக்ரபாணி!

“சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க நடந்து வந்துக்கிட்டிருந்தபோது யாருன்னு தெரியாம உங்களைக் கிண்டல் பண்ணிட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க” என்று காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சினேன்.

“அதை நான் எப்பவோ மறந்தாச்சு! நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே!” என்றவர், அடுத்தபடியாக, “உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?” என்று கேட்டார்.

“ஐந்நூறு ரூபாய்!”

“தமிழ்ல நடிக்கத்தானே ஐந்நூறு பேசியிருக்கு? நீயே தெலுங்குலயும், இந்த சீனைப் பண்ணிடு. இரண்டுத்துக்குமா சேர்த்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கோ” என்றார்.

எனக்கு நடப்பது எல்லாம் கனவா? நிஜமா என்ற சந்தேகமே வந்து விட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.

புரொடக்ஷன் மேனேஜர் ஜகன்னாதனைக் கூப்பிட்டு, ஆயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிக்கொண்டு வரச் சொன்னார்.

நான், ‘சார்! சார்! செக்கெல்லாம் வேணாம்’ என்றேன்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடி, “வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது. பயப்படாதே!” என்றார்.

“அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால, கேஷா கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்” என்றேன்.

“அப்படியா! சரி!” என்று சொல்லி விட்டு, ஜகன்னாதனிடம், “காரில் இவரை அழைச்சுக்கிட்டு நேரே பாங்குக்குப் போய், செக்கைப் பணமா மாத்தி இவரிடம் கொடுத்து விட்டு, இவரையும் அவரது இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடு!” என்றார்.

அந்த ஆயிரம் ரூபாயை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில்தான் ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பாண்ட் மூன்றும் வாங்கிக்கொண்டு நான் காதலித்த ரெஜினாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்”‌ என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் நாகேஷ்.

‘நாகேஷின் திரைப்பயணம்’ – நூலிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment