பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்!?

நடிகை சோனியா அகர்வால் பேச்சு!

பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’. ஷிஜின்லால் எஸ். எஸ். படத்தை இயக்கியுள்ளார்.

‘கிராண்மா’ படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பில் இயக்குநர் ஷிஜின்லால், முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், நடிகை சார்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜெயராஜ், “நான் படம் தயாரிப்பது என்று முடிவு செய்ததும் அதை தமிழில்தான் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்தேன்.

ஏனென்றால் இங்கே தான் நல்ல கதைகளையும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களையும் வரவேற்பார்கள். புதுமையான கருத்துகளுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் இந்த படத்தைத் தமிழில் தயாரித்தேன்” என்றார்.

இயக்குநர் ஷிஜின்லால் பேசும்போது, “எனக்கு மட்டுமல்ல படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இந்தப் படம் அமைந்திருந்தது.

நடித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும்.

குறிப்பாக சோனியா அகர்வால் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவிலானது. இந்தப் படம் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்கும் படியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகை சார்மிளா, “எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படி இந்த படம் உருவாகியுள்ளது. நான் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்று உற்சாகமாகப் பேசினார்.

நடிகை சோனியா அகர்வால் பேசியபோது, “படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கதைப்படி அவர்கள் அப்படி வைத்துள்ளார்கள். இது ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இருந்ததால் எனக்குப் பிடித்தது.

தமிழில் இடையில் சிலகாலம் நடிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் வெப் சீரியல்களில் நடித்தேன்.

பிரபல கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்படி பெண் பாத்திரத்தை மையமாக வைத்த படங்களில் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அது ஒரு ரகம் இது ஒரு ரகம் அவ்வளவுதான்.

பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இதுமாதிரி பெண்ணைப் பிரதானப்படுத்தி உருவாகும் படங்களில் பாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும். நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும்.

சண்டைக் காட்சியில் நடிப்பது அபாயகரமானது என்ற பொருளில் கேட்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் நடிப்பது சவாலான ஒன்றுதான்.

ஆனால், இந்தப் படத்தில் சரியாகத் திட்டமிட்டு எடுத்ததால் எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை.

பெண்கள் பலசாலிகள். பொதுவாகப் பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். எல்லா பெண்களுக்குள்ளும் இன்னொரு சக்தி வாய்ந்த பெண் இருப்பாள்.

இது உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு பெண்ணும் சவால்களைக் கடந்து தான் மேலே வருகிறாள்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

அப்படிச் செய்பவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கிறதுதானே? அப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கிறார்கள்.

இது திகில் படமா, பேய்ப் படமா என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் பெண் என்பவள் பேயை விட பயங்கரமானவள் என்று பலருக்கும் தெரிவதில்லை.

இந்தக் கருத்துதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று ஆர்வம் பொங்கப் பேசினார்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment