உணர்வுமிக்க பாடல்களைத் தந்த உடுமலை நாராயணகவி!

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் உடுமலை நாராயணகவி. இரவது இயற்பெயர் நாராயணசாமி.

முத்துசாமிக் கவிராயரின் மாணவரான இவருக்கு கவிராயர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு; இவர் ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

உடுமலைப்பேட்டையில் 1899-ம் ஆண்டு பிறந்த நாராயணகவியினுடைய பாடல்கள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர், நாராயணகவி என்று அனைவராலும் அறியப்பட்டார்.

நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு.கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர்.

புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

உடுமலை நாராயணகவியின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது.

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பெருமைக்குரிய உடுமலை நாராயணகவி 23.05.1981 அன்று இயற்கை எய்தினார்.

Comments (0)
Add Comment