விவேக் பெயரில் தெரு: முதல்வருக்கு பாரதிராஜா நன்றி  

சென்னை சாலிகிராமத்தில் விவேக் வாழ்ந்த தெருவுக்கு சின்னக் கலைவாணர் விவேக் தெரு என சென்னை மாநகராட்சியால் பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதுதொடர்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

தோன்றிற் புகழோடு தோன்றுதல் ஒரு வகை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
ஆனால், தன்னளவில் புகழ் சேர்த்து வாழ்தல்தான் மிகச் சிறந்த வெற்றி என்பேன்.
யாரின் துணையின்றி திறமையால் நாகரீக சிந்தனைகளால், இயற்கையை உயிராக பிணைத்துக் கொண்டதால் புகழ் பெற்றவர் கலைஞன் விவேக்.

சிரிப்பு மருந்து மனிதர்களுக்கு. மரம் நடும் மருந்து இயற்கைக்கு என வாழ்ந்த சிறந்த கலைஞனை இறப்பு ஒருபோதும் மறக்கடித்து விட முடியாது. நாம் மறக்கடிக்கவும் விடக் கூடாது. அந்த பகுத்தறிவுக் கலைஞனை சிறப்பிப்பது தலையாயக் கடமையாகும்.

அவர் வாழ்ந்த பகுதிக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என்ற பெயரிட்டு மகிழ்கிறது தமிழக அரசு.

அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பிலும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அதற்கான முயற்சியெடுத்த திருமதி விவேக், திரு.பூச்சி முருகன், திரு.செல்முருகன், நடிகர் திரு.உதயா உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

திரையுலகம் பெருங் கலைஞர்களுக்கான முயற்சியை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை முன்னுதாரணமாக இந்நிகழ்வை மனதில் கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு முறை திரைக்கலைஞர்களை பெருமைப்படுத்திப் பார்க்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி என்று நன்றி தெரிவித்துள்ளார்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment