வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்!

ஏப்ரல் – 23 : உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்! 

புத்தகம் வாசிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. இதை வலியுறுத்தும் விதமாகத் தான் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (UNESCO) உலகப் புத்தக தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி அனுசரிக்கிறது.

வாசிப்புப் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் சில…!

கவனச்சிதறல் குறையும்:

படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம் அன்றாடப் பழக்கமாகும்போது நம்முடைய கவனிப்புத்திறனும் அதிகமாகும்.

எந்தவொரு செயலையும் கவனத்தோடு செய்யும் ஆற்றல் மேம்படும்.

மன அழுத்தம் குறையும் :

வாசிப்பது என்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. நாம் வாசிக்கும் புத்தகம் நம்மை வெவ்வேறு நபர்களுடன் வேறு ஓர் உலகத்திற்கு இட்டுச்செல்கிறது. மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு புதிய சூழலைக் கொடுத்து புத்துணர்வை ஏற்படுத்தும்.

வாசிப்பு மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

வாசிப்புப் பழக்கம் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சியாகும். புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள், இயல்புகள், நிகழ்வுகளை நினைவில் வைக்க வேண்டிவரும். இது நம் நினைவாற்றலை மேலும் வலுப்படுத்தும்.

அதோடு எழுத்தாற்றல், படைப்பாற்றல், சிந்தனைத்திறன் போன்ற பல திறன்களை வளர்க்க உதவுகிறது வாசிப்புப் பழக்கம்.

இத்தகைய வளத்தை வழங்கும் வாசிப்பைச் சுவாசமாகக் கருதி நேசிப்போம், புத்தக தினத்தைக் கொண்டாடுவோம்.

Comments (0)
Add Comment