ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை ‘ழ’!

தமிழக சட்டப் பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.

அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லைத்தான் நாம் இன்று வரை பயன்படுத்தி வருகிறோம். தமிழ் தனித்து இயங்கக் கூடிய மொழி.

உதாரணத்துக்கு ‘ன்’ என்ற விகுதி, அசோகனின் பிராமியில் கிடையாது. ஆனால் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருளில் ‘ஆதன்’ என்ற பெயர் உள்ளது. அதில் ‘ன்’ வருகிறது. அசோகன் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்து இருந்ததை இது காட்டுகிறது.

அன்று கிடைத்த ‘ன்’ எழுத்துதான் இன்றைய எதிர்க் கட்சிதுணைத் தலைவர் பன்னீர்செல்வம் பெயரில் வருகிறது. அவை முன்னவர் பெயரும் ‘ன்’ என்றே முடிகிறது. முதலமைச்சர் பெயரை உச்சரித்தாலும் இந்த ‘ன்’ வருகிறது. இது தமிழின் சிறப்பு.

‘ழ’ எழுத்தின் பெருமை

தமிழில் பல எழுத்துகள் உள்ளன என்றாலும், ‘ழ’ என்ற எழுத்து எந்த மொழியிலும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ‘ழ’ எழுத்து வருகிறது. ஆக, ‘ழ’வாக இருந்தாலும், ‘ன்’ ஆக இருந்தாலும் அவை தமிழின் பெருமையாக காணப்படுகின்றன.

தமிழணங்கு என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை ஆல்பம் உருவாக்கியுள்ளார். தமிழ்த்தாய் என்றாலே கலை வடிவமாகத்தான் நமக்குத் தோன்றும்.

புலியை முறத்தால் துரத்திய புறநானூற்றுத் தாய் போன்ற உருவத்தை வைத்து, அவள் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து, அதன் உச்சியில் ‘ழ’ என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது என்றால், பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் காலம் வரை ‘ழ’ வருகிறது என்பதுதான் தமிழின் பெருமை” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment