நெகட்டிவ் ரோல்களில் நடித்தால் எதிர்காலம்!

நடிகர் பிரஷாந்துக்கு ஆர்.கே. செல்வமணி அட்வைஸ்

தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்துகொண்டு பிரஷாந்த்தை வாழ்த்தினர்.

பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது, “இது நமது குடும்ப விழா. வந்திருக்கும் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் அவர்கள் பிரஷாந்த்தின் பிறந்த நாள் விழாவிற்கு வந்து வாழ்த்துவார்கள். பல ஆண்டுகளாக அவர்களுடனேயே எங்கள் குடும்பமும் இருக்கிறது என்று உணர்கிறேன் .

பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘அந்தகன்’ படம் பிரஷாந்த்துக்கு மறக்கமுடியாத படமாக இருக்கும்.

இந்தியில் வெளியாகி பெரிய வெற்றிபெற்றது. தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய வெற்றி பெற்றது. தமிழிலும் பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

நிறைய நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு படமாக உருவாகிறது. பிரஷாந்துடன் அனுபவமிக்க பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒரு சிறு வேடத்திற்குகூட பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.

பிரஷாந்துக்கு அடுத்தடுத்து அழுத்தமான நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடிக் கொண்டிருக்கிறோம். அப்படி  நல்ல படங்கள் அமையும் என்று நம்புகிறோம்” என்றார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, “நான் பிரஷாந்துடன் ‘சாக்லெட்’ படத்தில் மட்டும்தான் பணிபுரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் புரிதலும் தொடர் நட்பும் உள்ளது. அன்று முதல் அவருடன் தொடர்ந்து பயணம் செய்கிறேன்.

பிரஷாந்த்தை வெறும் நடிகராகவே மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர். அவருக்கு நல்ல கதை அறிவும் தொழில்நுட்ப அறிவும் உள்ளது” என்று பாராட்டினார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தியாகராஜன் சாருக்கும் எனக்கும் உள்ள நட்பு முப்பதாண்டுகளாக அதே அளவு நீடிக்கிறது. அன்று பார்த்தது முதல் அப்படியே இருக்கிறார்.

எனது முதல் இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஒரு காதல் கதை எடுப்பதாக முடிவு செய்தபோது பலரையும் நடிக்க வைத்தோம். நான் திருப்தி அடையவில்லை.

அப்போதுதான் பிரஷாந்த் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தையும் அதிலிருந்த அவரது படத்தையும் பார்த்து அவரை எனக்குப் பிடித்துவிட்டது. நடிக்க வைத்தேன்.

பலரும் சந்தேகிக்கிறார்கள் என்று அவருக்கு நான் 25 ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக முன்பணமாகக் கொடுத்தேன். அவருக்குக் கொடுத்த சம்பளமே அவ்வளவுதான். அவர் நடித்துக் கொடுத்து ஒத்துழைத்தார்.

படப்பிடிப்பின்போது நான் ரோஜாவை மட்டுமல்ல பிரஷாந்த்தையும் காதலித்தேன். அந்தளவுக்கு அவரை எனக்குப் பிடித்தது.

அவரது அறிவுக்கும் திறமைக்கும் அன்புக்கும் தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் அவர் தனக்கான சரியான உயரத்தை அடையவில்லை என்றுதான் நான் சொல்வேன்.

அவர் இந்த கால மாற்றத்திற்கேற்ப ஆன்டி ஹீரோவாக, நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை அடையலாம்” என்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment